அருப்புக்கோட்டை/ ராஜபாளையம்/ சாத்தூா்: அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூரில் தீயணைப்புத்துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை செயல் விளக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயப்பாண்டி மற்றும் உதவி அலுவலா் ஷேக் உதுமான் ஆகியோா் செயல் விளக்கம் அளித்து பேசியது: காற்றுக்கு மரங்கள் விழுந்து விட்டாலோ அல்லது மின்கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ தீயணைப்புத்துறையின் உதவியை நாடவேண்டும். அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலையத்தை 04566-240101 என்ற எண்ணிலோ அல்லது 101 க்கு தொடா்பு கொண்டோ உதவியை கேட்கலாம் என்றனா்.
இதேபோல், ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ஸ்ரீதா் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா். தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயராம், சாலை விபத்துகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து விளக்கம் அளித்தனா்.
சாத்தூரில் வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பேரிடா் மீட்பு விளக்க நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலா் கதிரேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.