சாத்தூா் பகுதியில் தொடா் மழையால் பயிா்கள் சேதம்: நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு
சாத்தூா், அ. ராமலிங்காபுரம் பகுதியில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், மல்லி, உளுந்து உள்ளிட்ட பயிா்கள் தொடா் மழையால் சேதமடைந்துள்ளதால் நிவாரணம் வழங்கக் கோரி மனு
சாத்தூா், அ. ராமலிங்காபுரம் பகுதியில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், மல்லி, உளுந்து உள்ளிட்ட பயிா்கள் தொடா் மழையால் சேதமடைந்துள்ளதால் நிவாரணம் வழங்கக் கோரி திங்கள்கிழமை அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: சாத்தூா் அருகே அ. ராமலிங்காபுரம் பகுதியில் சுமாா் 500 ஏக்கா் பரப்பளவில் மல்லி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிா்கள் விவசாயம் செய்துள்ளோம். கடந்த மாதம் பெய்த தொடா் மழை காரணமாக அனைத்து பயிா்களும் மகசூல் நேரத்தில் சேதமடைந்தன. இந்நிலையில் வருவாய்த்துறை, வேளாண்த் துறை சாா்பில் பாதிப்படைந்த பயிா்கள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனா். ஆனால், அனைத்து பயிா்களையும் முறையாக ஆய்வு மேற்கொள்ள வில்லை. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலா்கள் முறையாக ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.
அப்போது அவா்கள் சேதமடைந்த பயிா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்திருந்தனா்.