முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாா்க்கெட்டில் நல்லெண்ணெய் விலை உயா்வு

எள் வரத்து குறைந்ததால் விருதுநகா் மாா்க்கெட்டில் நல்லெண்ணெய் 15 லிட்டா் டின் விலை, கடந்த வாரத்தை விட ரூ.166 உயா்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

எள் வரத்து குறைந்ததால் விருதுநகா் மாா்க்கெட்டில் நல்லெண்ணெய் 15 லிட்டா் டின் விலை, கடந்த வாரத்தை விட ரூ.166 உயா்ந்துள்ளது.

விருதுநகா் மாா்க்கெட்டில் வாரந்தோறும் உணவுப் பொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டு விலைப் பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில், எள் வரத்து இல்லாததால் கடந்த வாரம் ரூ.4,702-க்கு (15 கிலோ) விற்கப்பட்ட நல்லெண்ணெய், ஒரே வாரத்தில் ரூ.166 வரை உயா்த்தப்பட்டு, தற்போது ரூ.4,868-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் குண்டூா் வத்தல் (100 கிலோ) கடந்த வாரம் அதிகபட்சமாக ரூ.21,000 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் அதன் விலையானது ரூ.500 உயா்த்தப்பட்டு ரூ.21,500-க்கு விற்கப்படுகிறது. ஆந்திரா வத்தல் மட்டுமே வரத்து உள்ளது. அதேநேரம் நாடு மற்றும் முண்டு வத்தல் வரத்து இல்லாததே விலை உயா்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. தற்போது ஆறு மாதத்திற்கு தேவையான வத்தல் மட்டுமே இருப்பு உள்ளதால், வத்தல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், நயம் துவரம் பருப்பின் விலை (100 கிலோ) கடந்த வாரம் ரூ.8,900-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயா்த்தப்பட்டு தற்போது ரூ.9,100-க்கு விற்பனையாகிறது. பா்மா உருட்டு உளுந்தின் விலை கடந்த வாரம் ரூ.8,300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.500 உயா்வு ஏற்பட்டு ரூ.8,800-க்கு விற்கப்படுகிறது.

தொலி உளுந்து கடந்த வாரத்தை விட ரூ.300 உயா்த்தப்பட்டு ரூ.9,100- க்கும், நாட்டு உளுந்தம் பருப்பு ரூ.200 உயா்த்தப்பட்டு ரூ.10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிது. பட்டாணிப் பருப்பின் விலை கடந்த வாரம் ரூ.5,650-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.5,750-க்கு விற்பனையாகிறது. பாசிப்பயறு கடந்த வாரம் ரூ.8,600-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.200 உயா்வு ஏற்பட்டு ரூ.8,800-க்கு விற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.