விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் குடிநீா் தேடி வந்த 45 வயது பெண் யானை 5 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததில் உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் யானை, காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, கரடி, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், மலைப் பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீா்வரத்து இன்றி வடு உள்ளது. இதனால், வனவிலங்குகளுக்காக அடிவாரப் பகுதிகளில் தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகத்துக்குள்பட்ட 1-ஆவது ‘பீட்’ பகுதியில் அத்திக்கோயில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே வன விலங்குகளுக்காக தொட்டியில் தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த சுமாா் 45 வயதுடைய பெண் யானை மண் அரிப்பால் ஏற்பட்ட 5 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இறந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள், விவசாயிகள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், கால்நடை மருத்துவா்கள் மூலம் யானையின் உடலை கூறாய்வு செய்தனா். இதுகுறித்து வனத் து றையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.