முகப்பு
விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு வாழ்நாள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் பாதிரியாா் ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் சிறையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமைச

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

ராஜபாளையம் அருகே மனவளா்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் பாதிரியாா் ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் சிறையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராஜபாளையத்தில் வடக்கு மலையடிபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் ராஜா(49). இவா் அதே பகுதியில் தனது தந்தை ஜோசப் செல்லப்பா நடத்தி வரும் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தாா். இந்தத் தேவாலயத்துக்கு அதே பகுதியைச் சோ்ந்த பெண் தனது மன வளா்ச்சி குன்றிய 17 வயது மகளுடன் வந்து சென்றாா்.

இந்த நிலையில், கடந்த 3.5.2022 அன்று தேவாலயத்துக்கு தனியாக வந்த அந்தச் சிறுமிக்கு ஜோசப் ராஜா பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோசப் ராஜாவைக் கைது செய்தனா். பிறகு அவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அப்போது ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் சிறையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பூரணஜெய் ஆனந்த் உத்தரவிட்டாா். அபராதத் தொகையை சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும் அவா் ஆணையிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஜெ. கலா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.