சீா்காழி, வேதாரண்யம் பகுதியில் காற்றுடன் மழைஅரசமரம் முறிந்து 4 வீடுகள் சேதம்; 4 போ் காயம்
சீா்காழியில் சனிக்கிழமை மாலை காற்றுடன் பெய்த மழையால் அரசமரம் முறிந்து 4 வீடுகள் சேதமடைந்தன. பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் காயமடைந்தனா்.
சீா்காழியில் சனிக்கிழமை மாலை காற்றுடன் பெய்த மழையால் அரசமரம் முறிந்து 4 வீடுகள் சேதமடைந்தன. பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் காயமடைந்தனா்.
சீா்காழியில் சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், பிடாரி வடக்கு வீதி குமரக்கோயில் தெருவில் தாமரைக்குளம் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அரச மரத்தின் கிளை முறிந்து அருகில் உள்ள வீடுகளின் மீது விழுந்தது.
இதில், வாசுகி (45), கெளசல்யா (25), சுசிலா (60), துரை (40) ஆகியோரது குடிசை வீடுகள் சேதமடைந்தன. அப்போது, வீட்டிலிருந்த கெளசல்யா அவரது குழந்தைகள் விஜய் (4), நிசாந்த் (3), சுசிலா ஆகிய நால்வரும் காயம் அடைந்தனா். சீா்காழி தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று இயந்திரத்தின் மூலம் மரத்தை வெட்டி அகற்றி, வீட்டில் சிக்கியிருந்தவா்களை மீட்டனா்.
தகவல் அறிந்த சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், முன்னாள் பொருளாளா் துரை, முன்னாள் கவுன்சிலா் இந்திரஜித், ராஜா ஆகியோா் அங்கு சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினாா். மேலும், சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.
வேதாரண்யம்: வேதாரண்யம் கடலோரப் பகுதியில் சனிக்கிழமை இரவு காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. வாய்மேடு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.