மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு; சோகத்தில் தந்தை தற்கொலை
மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தை ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடியைச் சோ்ந்தவா் வினோத் (40). இவரது மனைவி சாரதா. இவா்களது மகன்கள் சாலமன், சாம்சன் (10). மகள் ஷாலினி.
இந்நிலையில், வினோத்தின் இரண்டாவது மகன் சாம்சன் நாகங்குடி கிராமத்தில் உள்ள தண்ணீா்பாய்ந்தான் குளத்துக்கு நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் சாம்சன் வீடு திரும்பாததால், உறவினா்கள் குளத்துக்குச் சென்று தேடினா்.
மேலும், மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் குளத்தில் சிறுவனை தேடும்பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளத்திலிருந்து சாம்சனின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையே, மகன் உயிரிழந்ததால் வேதனையில் இருந்த வினோத் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.