ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
மீன் இனப் பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை கிழக்கு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் 61 நாள்களுக்கு பாரம்பரிய கலன்கள் நீங்கலாக, விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மேலும் மீனவா்கள் தங்களது படகுகளை ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு 12 மணிக்குள் பதிவு செய்யப்பட்ட தங்குதளத்துக்கு கொண்டுவந்து நிறுத்த அறிவுறுத்தப்படுகின்றனா்.
Advertisement
மீன்படி தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.