வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தம்
Revenue department strike for 2nd day
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 2-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா், தமிழகம் முழுவதும் துணை வட்டாட்சியா் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்; அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, முதல்கட்டமாக பிப்.13- ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக பணிகளைப் புறக்கணித்து பிப்.22- ஆம் தேதி முதல் வருவாய்த்துறை அலுவலா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் தமிமுன் அன்சாரி, செயலா் தனஞ்ஜெயன், இணைச் செயலா் பூபதி, வட்டத் தலைவா் குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.