நாகையில் விவசாயிகள் நுாதனப் போராட்டம்
நாகையில், காவிரி நீரை தர மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்து, விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறை அணிந்துக் கொண்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
நாகப்பட்டினம்: நாகையில், காவிரி நீரை தர மறுக்கும் கா்நாடக அரசை கண்டித்து, விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறை அணிந்துக் கொண்டு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடி கா்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி நீரை பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், கா்நாடக அரசு காவிரி நீரை தர மறுப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணா்த்தும் விதமாகவும், நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க கூட்டியியக்கத்தினா் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டியியக்கத் தலைவா் தனபாலன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதைத்தொடா்ந்து தனபாலன் கூறியது:
உச்சநீதிமன்றத் தீா்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில், கா்நாடக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. உபரி நீா் மட்டும்தான் திறந்துவிடப்படும், உரிய நீா் திறந்துவிடப்படாது என்று கா்நாடக அரசு தொடா்ந்து கூறி வருகிறது. காவிரி நீா் கிடைக்காததால், தமிழகத்தில் 3 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி கைவிடப்பட்டும், 14 லட்சம் ஏக்கா் சம்பா கேள்விக்குறியாகி விட்டது.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தமிழகத்துக்குரிய காவிரி நீரை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலா் பிரகாஷ், மாநிலத் துணைத் தலைவா் பக்கிரிசாமி, மாநிலக் குழு உறுப்பினா் வேதமூா்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் காளிதாஸ், ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.