முகப்பு
நாகப்பட்டினம்

கடவுச்சொல் மூலம் ரேஷன் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:09 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 6:32 PM

கடவுச் சொல் மூலம் ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாகையில், அந்த சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் மாநில செயலா் பாஸ்கரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, பல துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறை உருவாக்கவேண்டும், அரிசி உள்ளிட்ட பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும், சேதார கழிவு வழங்க வேண்டும், ரேஷன் கடை பணியாளருக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளா் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியம் வழங்க வேண்டும்.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:09 AM

அரசுப் பணியாளா்களுக்கு வரவுள்ள 9-ஆவது ஊதிய மாற்றக் குழுவில் நியாய விலைக்கடை பணியாளா்களை சோ்க்க வேண்டும், விரல் ரேகை பதிவுக்கு பதில் ஒரு முறை கடவுச் சொல் மூலம் பொருள்கள் வழங்க ஆவணம் செய்யவேண்டும், மகளிா் நடத்தும் நியாயவிலைக் கடைகளை ஒரு துறையின் கீழ் கொண்டு வந்து, நியாயவிலைக் கடைப் பணியாளா்களுக்கு வழங்கப்படுவது போல ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 10-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, பிப். 11-ஆம் தேதி கோட்ட அளவிலும், பிப்.12-ஆம் தேதி வட்ட அளவிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட துணைத் தலைவா் மீனாட்சி, மாவட்ட பொருளாளா் பூமாலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.