கடல் அலையில் சிக்கி பிளஸ் 2 மாணவர் மாயம்
காரைக்கால் பகுதி கடலில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவர் அலையில் சிக்கி மாயமானார்.
காரைக்கால் பகுதி கடலில் வியாழக்கிழமை குளிக்கச் சென்ற பிளஸ் 2 மாணவர் அலையில் சிக்கி மாயமானார்.
திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் (17) நாகப்பட்டினம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தார்.
இவரும், இவரது நண்பர்கள் திலீப்ராஜ், பிரசன்னா ஆகியோர் வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர். மழை ஓய்ந்திருந்தபோதிலும், கடல் சற்று சீற்றத்துடனே காணப்பட்டது. இந்நிலையில் மூவரும் கடலில் குளித்தனர். அப்போது, அலையில் சிக்கி தமிழ்வாணன் காணாமல்போனார். மற்ற இருவரும் அவரைத் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில், காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடலோரக் காவல் நிலையத்தினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மாணவர்கள் குளித்த கடல் பகுதிக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் இவரது நிலை தெரியவில்லை. இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.