காரைக்கால் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பெரியப்பேட் பகுதியில் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை இரவு தொடங்கியது. துணை பங்கு குரு இருதயராஜ் புனிதக் கொடியை ஏற்றிவைத்தார். இதைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடத்தப்பட்டது.
விழாவின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை இரவு சிறிய தேர் பவனி, திருப்பலி நடைபெற்றது. இதேபோல் வெள்ளிக்கிழமையும் சிறிய தேர் பவனி மற்றும் திருப்பலி நடைபெறும்.
விழாவின் சிறப்பு அம்சமான மின் அலங்கார பெரிய தேர் பவனி சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (அக். 8) காலை கொடியிறக்கம் செய்யப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழாக் குழுவினர், பெரியப்பேட் கிராம மக்கள் செய்துள்ளனர்.