முகப்பு
காரைக்கால்

அம்பகரத்தூர் மகா மாரியம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

திருநள்ளாறு அருகேயுள்ள அம்பகரத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா  வெள்ளிக்கிழமை (மார்ச் 30) நடைபெறவுள்ளது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:17 AM
பகிர்:

திருநள்ளாறு அருகேயுள்ள அம்பகரத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா  வெள்ளிக்கிழமை (மார்ச் 30) நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலைச் சேர்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இக்கோயிலைச் சார்ந்ததாக ஸ்ரீ ஐயனார் கோயிலும் உள்ளது. இவற்றுக்கு குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருப்பணிகளைத் தொடங்கினர்.
திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோயில் அருகே யாகசாலை பூஜைகள்  புதன்கிழமை தொடங்கின.
காலை கணபதி, லட்சுமி, நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு இரவு முதல் கால பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு 2 -ஆம் கால பூர்ணாஹூதியும், இரவு 9 மணிக்கு 3 -ஆம் கால பூர்ணாஹூதி ஆராதனையும் நடைபெற்றது.
யாகசாலை பூஜை நிறைவாக வெள்ளிக்கிழமை காலை 8 மணி மகா பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டு கடம் புறப்பாடும், 9 மணிக்கு ஸ்ரீ ஐயனார் கோயில் குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. தொடர்ந்து, 10 மணிக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் விமானங்களில் புனித நீர் ஊற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் பி. தில்லைவேல் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், திரளான பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்குமாறு கோயில் அறங்காவல் குழுவினர் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.