பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்
காரைக்கால் பகுதி குட்ஷெப்பெர்டு ஆங்கிலப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் பகுதி குட்ஷெப்பெர்டு ஆங்கிலப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மேலகாசாக்குடி பகுதியில் இயங்கிவரும் இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பள்ளி சிறார்கள் சுமார் 200 பேர் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு வந்திருந்தனர். மைதானத்தில் கிருஷ்ணனின் செயல்பாடுகள் பலவற்றை வேடிக்கையாக செய்துக்காட்டினர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் பகைமை கொள்ளாமல், நட்புடன் வாழவேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விழா கொண்டாடப்படுகிறது.
நாம் செய்யும் நல்ல செயல்களே நம்மை வந்தடையும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையிலேயே இந்த விழா கொண்டாடப்படுகிறது என பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியரிடையே பேசினர். மழலையர்கள் வெண்ணெய் கொண்டு வந்திருந்தனர். கிருஷ்ணனுக்கு பிடித்தது என்பதால், அதை சக மாணவர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் ரான்சன்தாமஸ், முதல்வர் ஜாய்தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர்.