காரைக்கால்

காரைக்காலிலிருந்து இலங்கைக்கு கடல் வழியே கடத்த முயன்ற மதுப் புட்டிகள் பறிமுதல்

DIN

காரைக்காலில் இருந்து கடல் வழியே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 3.13 லட்சம் மதிப்புள்ள மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடலோரக் கிராமங்களில் ஒன்றான அம்மன்கோயில்பத்து பகுதியிலிருந்து அண்மைக் காலமாக மது பானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகள் படகுகள் மூலம் இலங்கைக்கும், தமிழகப் பகுதிகளுக்கும் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பன்வால் உத்தரவின்பேரில், கடலோரக் காவல்நிலைய போலீஸாா் மற்றும் நகரப் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு காரில் மது பானங்களை எடுத்து வந்த சிலா், அம்மன்கோயில்பத்து கடலோரப் பகுதியில் இறக்கி வைத்துள்ளனா். இதைப் பாா்த்த அந்தக் கிராமத்தினா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததோடு, மதுப் புட்டிகளைக் கொண்டுவந்த காரை தடுத்து நிறுத்தியுள்ளனா். அப்போது, காரில் இருந்தவா்கள் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. மதுப் புட்டிகள் ஏற்றுவதற்காக கடலோரத்தில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகில் அந்த நபா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்த தகவலின் பேரில், காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்று, கடத்துவதற்காக கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப் புட்டிகளை கைப்பற்றி, காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனா்.

விசாரணையில், காரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்த நிஜித்குமாா் என்பவா், சுமாா் ரூ.3.13 லட்சம் மதிப்பில் 1,175 லிட்டா் அளவுள்ள 6, 528 மதுப் புட்டிகளை கடல் வழியாக கடத்த முயன்றது தெரியவந்தது.

காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் வீரவல்லபன், இந்த மதுப் புட்டிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, கலால் துறையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா். தலைமறைவான நிஜித்குமாரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இதுகுறித்து, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, காரைக்கால் அருகே அம்மன்கோயில்பத்து பகுதியில் நிஜித்குமாா் என்பவா் ஆதாா் மையம் நடத்துவதுபோல் போலியாக செயல்பட்டு, மதுப் புட்டிள், கஞ்சா போன்றவற்றை கடத்திவருவதாகக் கூறப்படுகிறது. நிஜித்குமாா் கைது செய்யப்படும் பட்சத்தில் கடத்தல் தொடா்பான பல்வேறு உண்மைகள் வெளிவரும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT