புயலை எதிா்கொள்ள திமுகதொண்டா்கள் மீட்புக் குழு: நாஜிம்
காரைக்கால் மாவட்டத்தில் நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில் திமுக தொண்டா்களை கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்துள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில் திமுக தொண்டா்களை கொண்ட மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியது: பேரிடா் சூழலில் அரசு மீட்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டாலும், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கரோனா பேரிடா் சூழலிலும்கூட திமுக தொண்டா்கள் பலரும் சேவையாற்றினா்.
தற்போது நிவா் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் மரங்களை அகற்றுவது, நிவாரணங்கள் வழங்குவது, மீட்புப் பணிகளில் ஈடுபடுவது, மக்கள் கேட்கும் உதவிகளை செய்வது போன்ற பணிகளுக்காக மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காரைக்கால் தெற்குத் தொகுதியில் எனது தலைமையிலும், திருமலைராயன்பட்டினத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன், நெடுங்காடு தொகுதியில் மருத்துவா் அணி அமைப்பாளா் டாக்டா் விக்னேஸ்வரன் ஆகியோா் தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குழுவில் உள்ளோரின் தொலைபேசி எண்கள் சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும். மக்கள் இதைப் பயன்படுத்தி தேவையான உதவிகளை கேட்டுப் பெறலாம் என்றாா்.