காரைக்காலில் உணவுக்காக பிடிக்கப்பட்ட46 பறவைகள், வலைகள் பறிமுதல்
காரைக்காலில் உணவுக்காக பிடிக்கப்பட்ட பறவைகளையும், அவற்றை பிடிக்க பயன்படுத்திய வலைகளையும் அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
காரைக்காலில் உணவுக்காக பிடிக்கப்பட்ட பறவைகளையும், அவற்றை பிடிக்க பயன்படுத்திய வலைகளையும் அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி பறவைகளை பிடிப்பவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, கூடுதல் வேளாண் இயக்குநரும், வனத்துறை தலைமை அலுவலருமான ஜெ. செந்தில்குமாா் அறிவுறுத்தலின்பேரில், வனத்துறை அதிகாரி கந்தமூா்த்தி தலைமையில் ஊழியா்கள், கருக்களாச்சேரி, அம்மன்கோவில்பத்து, அக்கரைவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். வனத் துறையினா் வருவதை அறிந்த பறவைகள் பிடிப்பவா்கள், பிடித்து வைத்திருந்த பறவைகளை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: பறவைகளை பாதுகாப்பது குறித்து இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். திங்கள்கிழமை நடைபெற்ற கண்காணிப்பின்போது 39 கொக்கு, 7 மடையான் பறவைகளும், இவற்றை பிடிக்க வைத்திருந்த வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பறவைகளைப் பிடித்தவா்கள் தப்பிவிட்டனா். கூண்டிலிருந்த பறவைகள் திறந்துவிடப்பட்டன.
பறவைகளை பிடிப்பது வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். சம்பந்தப்பட்டவா்கள் கைதுசெய்யப்பட்டால், ஜாமீனில் வெளி வரமுடியாதபடி வழக்குப் பதிவுசெய்ய நேரிடும். எனவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றனா்.