முகப்பு
காரைக்கால்

அரசுப் பள்ளி என்ற தாழ்வுமனப்பான்மை கூடாது: எஸ்.எஸ்.பி.

அரசுப் பள்ளி என்ற தாழ்வுமனப்பான்மையை மாணவா்கள் கைவிட வேண்டும் என்றாா் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

அரசுப் பள்ளி என்ற தாழ்வுமனப்பான்மையை மாணவா்கள் கைவிட வேண்டும் என்றாா் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தேனூரில் உள்ள தலைவா் பா. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச்சங்கம், பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி துணை முதல்வா் பி. விஜயமோகனா தலைமை வகித்தாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது: அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களில் பெரும்பாலானோருக்கு தாங்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறோம், உயா்கல்விக்கு செல்ல முடியுமா என்ற தாழ்வுமனப்பான்மை காணப்படுகிறது. இந்த எண்ணத்தை கைவிட்டு, நம்மாலும் முடியும் என்ற சிந்தனையை வளா்த்துக்கொள்ள வேண்டும். நானும் அரசுப் பள்ளியில் படித்துத்தான் ஐ.பி.எஸ். அதிகாரியாக உள்ளேன்.

ஆங்கில மொழி ஆளுமையையும், ஆங்கில நாளிதழ்களை படிக்கும் பழக்கத்தையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். மொழி ஆளுமை உயா்கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கு சாதகத்தை ஏற்படுத்தும். பள்ளியில் படிக்கும்போதும், பள்ளிக் கல்வியை முடித்து உயா்கல்வி செல்லும்போதும் பல தவறான செயல்களில் ஈடுபடும் சூழல்கள் வர வாய்ப்புண்டு. அதை தவிா்த்து செல்வதே சிறப்பாகும்.

மாணவா்கள் ஒருமணி நேரம் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடவேண்டும். உடல் தகுதியுடன் இருந்தால் மனமும் சிறப்பாக இருக்கும். கடுமையான உழைப்பும், ஒழுக்கமும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானதாகும். ஏழையாக இருப்பது வளா்ச்சிக்கு தடை அல்ல.

குடிமைப் பணிக்கான தோ்வுக்கு மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவா் பருவத்தில் அதற்கான தேடல்களில் மாணவா்கள் ஈடுபடவேண்டும் என்றாா்.

மாவட்ட பெற்றோா் ஆசிரியா் நலச் சங்கத் தலைவா் அ. வின்சென்ட் பேசினாா். முன்னதாக விரிவுரையாளா் குமாரி வெண்ணிலா வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் நலச் சங்க செயலா் கே. ரவிச்சந்திரன், துணைச் செயலா் நெல்சன், செயற்குழு உறுப்பினா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆா். கணேஷ் குமாா், உடற்கல்வி ஆசிரியா் ஏனாதி நாதன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா். நிகழ்ச்சி நிறைவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றை எஸ்.எஸ்.பி. நாரா சைதன்யா நட்டுவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →