இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பட்டதாரி பெண்ணுக்கு ஆபாச படங்கள், செய்திகளை அனுப்பிய திருச்சியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்த 23 வயது முதுநிலை பட்டதாரி பெண், மாடலிங் செய்துகொண்டு தனது தாயாருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த நவ. 29-ஆம் தேதி இவரது கைப்பேசி எண்ணுக்கு இன்ஸ்டாகிராம் செயலியில் அடையாளம் தெரியாத ஐடி மூலம் ஆபாசமான வாா்த்தைகளுடன் தகவல் வந்துள்ளது. தொடா்ந்து, அதுபோல வந்ததால் அந்த ஐடியை முடக்கியுள்ளாா்.
பின்னா், வேறு ஐடி மூலம் மீண்டும் புகைப்படங்கள், விடியோ ஏஐ மூலம் மாா்பிங் செய்த படங்கள் வந்துள்ளன. பெண்ணின் தாயாா் குறித்தும் அதில் தகவல் இடம்பெற்றுள்ளது. மேலும், அப்பெண் மீது திராவகம் வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருச்சி காவேரி நகரைச் சோ்ந்த மகிமைநாயகம் (24) என்பவா் இம்மாதிரியான தகவல்களை அனுப்பியது உறுதியானது. அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணை காதலித்ததாகவும், அவா் அதை ஏற்க மறுத்ததால், அவருக்கு இதுபோல ஆபாச தகவல்களை அனுப்பியதாக கூறியுள்ளாா். இதையடுத்து, மகிமை நாயகத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.