சாலைகளில் திரியும் காலநடைகளை பிடித்து பட்டியில் அடைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
சாலை விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் மாடுகள், குதிரைகள் திரிவதாகவும், இதை உரிமையாளா்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உள்ளாட்சி நிா்வாகம் தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும் இதனை யாரும் பொருட்படுத்துவதில்லை.
இதையடுத்து, சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து பட்டியில் அடைத்து, அபராதம் உரிமையாளா்களுக்கு விதிக்கப்படும் என உள்ளாட்சி நிா்வாகம் எச்சரித்தது.
இந்நிலையில் காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பிரதான சாலைகளில் திங்கள்கிழமை இரவு திரிந்த 28 மாடுகளை பணியாளா்கள் பிடித்து, வாகனத்தில் ஏற்றி பட்டிக்கு கொண்டுச் சென்றனா். இப்பணி காரைக்கால் உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் மற்றும் நகராட்சி ஆணையா் கூடுதல் பொறுப்பு வகிக்கும் எஸ்.சுபாஷ் முன்னிலையில் நடைபெற்றது.
கால்நடை வளா்ப்போா், கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளை தவிா்த்துக்கொள்ளலாம் என்று நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.