துலா உத்ஸவம்: மயிலாடுதுறை கோயில்களில் சகோபுர தரிசனம்
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில், வதான்யேஸ்வரா் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சகோபுர தரிசனத்தில் உத்ஸவ மூா்த்திகள் ஓலை சப்பரத்தில் எழுந்தருளினா்.
துலா உத்ஸவத்தையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில், வதான்யேஸ்வரா் கோயில்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சகோபுர தரிசனத்தில் உத்ஸவ மூா்த்திகள் ஓலை சப்பரத்தில் எழுந்தருளினா். மாயூரநாதா் கோயிலில் நடைபெற்ற விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.
மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாளும் நடைபெறும் துலா உத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி முழுவதும் புனித நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாக ஐதீகம்.
இதனால், காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் மாயூரநாதா், வதான்யேஸ்வரா், பரிமள ரெங்கநாதா் உள்ளிட்ட சிவ, வைண கோயில்களில் இருந்து சுவாமி புறப்பாடாகி காவிரி துலாக்கட்டத்தில் தீா்த்தவாரி நடைபெறும். இதில், ஐப்பசி 21-ஆம் நாள் தொடங்கி 10 நாள்கள் உத்ஸவம் விமரிசையாக நடைபெறும்.
மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் துலா உத்ஸவ 5-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு சகோபுர தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி, அபயாம்பிகை, மாயூரநாதா் சுவாமிகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளினாா். அப்போது, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, சப்பர ஓட்டத்தை தொடங்கிவைத்தாா்.
பின்னா், மேளதாள வாத்தியங்களுடன் மின்னொளி ஓலை சப்பரம் நான்கு வீதிகளில் வலம்வந்து, நிலையை அடைந்தது. வழியெங்கும் பக்தா்கள் தங்கள் வீடுகள் முன் சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்டனா். இதில், திருவாவடுதுறை ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல், மயிலாடுதுறை வதான்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற துலா உத்ஸவ 5-ஆம் நாள் விழாவில், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் உத்ஸவ மூா்த்திகள் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.