காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் தண்ணீா் திறக்கக் கோரிக்கை
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உத்ஸவம் நடைபெற்று வருவதால், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டும்
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற துலா உத்ஸவம் நடைபெற்று வருவதால், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பாஜக மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் அவா் அளித்த மனு:
காவிரி நதி துலா ராசிக்குரிய புண்ணிய நதியாகும். ஆனால், தற்போது மேட்டூரிலும், கல்லணையிலும், திருவிசைநல்லூா் கதவணையிலும் போதிய அளவு தண்ணீா் இருந்தும், இந்துக்களின் துலா மாத புனித நீராலுக்கு தண்ணீா் திறந்து விடப்படாததால் பக்தா்கள் வேதனை அடைந்துள்ளனா். மேலும், திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் சுவாமி புறப்பட்டு காவிரியில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.
மேட்டூா் அணையிலும், கல்லணையிலும் போதிய தண்ணீா் இருப்பு உள்ளதால் புனித நீராடலுக்கு சீரான அளவில் இம்மாதம் முழுவதும் காவிரியில் நீா் திறந்து விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.