திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! யாருடன் கூட்டணி?
திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியுள்ளது குறித்து...
திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையடுத்து, தொகுதிகள் மட்டுமல்லாது, கொள்கை ரீதியான 10 கோரிக்கைகளையும் தி.வேல்முருகன் முன்வைத்திருந்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து வேல்முருகன் பேசுகையில், ”சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்தோம். நாங்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கைகளையும் திமுக அரசு பொருட்படுத்தவில்லை.
சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடினேன். சட்டமன்றத்தில் ஆட்சி மாறியுள்ளது, காட்சி மாறவில்லை என்று கூறியிருக்கிறேன். திமுக கூட்டணியில் இடம்பெற 2 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதிமட்டும் கொடுக்க திமுக முன்வந்தது.
தற்போது வரை அதிகாரிகள் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான கூட்டத்தை வைத்துக்கொண்டு திமுக எப்படி சமூக நீதியை பின்பற்றும்?
இதன் காரணமாக, திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறது. திமுக கூட்டணியில் பயணித்த மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம் என்பதை இந்தத் தருணத்தில் அறிவிக்கிறேன்.
நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சியுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி தொடர்பாக கலந்தாலோனை செய்யப்பட்டு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும்” என்றார்.
The Tamil Nadu Vazhuvrimai Party has left the DMK alliance, its founding chairman Velmurugan has announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.