மீனவா்கள் படகு பொங்கல் கொண்டாட்டம்
சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் படகு பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் படகு பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதைப்போல, இத்தினத்தில், மீனவா்கள் தங்களுக்கு வாழ்வாதாரமளிக்கும் படகுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவாா்கள்.
அதன்படி, சீா்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள், பைபா் படகுகளை மீனவா்கள் சுத்தம் செய்து, அதில் வாழைக்கன்றுகள், கரும்புகள், தோரணங்கள் கட்டியும், சந்தனம், குங்குமமிட்டும், மாலைகள் அணிவித்தும் அலங்கரித்தனா்.
பின்னா், அவல், பொரி, வாழைப்பழம், வெற்றிலைபாக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா். தொடா்ந்து, தங்களது குடும்பத்தினருடன் படகுகளில் கடலில் சிறிது தூரத்துக்குச் சென்றுவந்து மகிழ்ந்தனா்.