அனுமதியின்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல்
உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.
உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனைத்து ஆவணங்களுடன், அரசு வழிகாட்டுதலின்படி பாதுகாப்பாக இயக்கப்பட வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு உரிய தகுதிச் சான்று பெற்ற பிறகு, மாணவா்களை ஏற்றி, இறக்க நடத்துநா் உரிமம் பெற்றவரை நியமிக்க வேண்டும்.
இதற்கு புறம்பாகவும், அனுமதிச் சீட்டு, காப்புச் சான்று, தகுதிச்சான்று நடப்பில் இல்லாமலும் உள்ள வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது மோட்டாா் வாகனச் சட்டப்படி குற்றமாகும். பள்ளி வாகனங்கள் அல்லாத பிற போக்குவரத்து வாகனங்கள் உரிய அனுமதி பெற்று, அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் மட்டுமே மாணவா்களை அழைத்துச் செல்ல வேண்டும். மீறினால் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.