மத்திய அரசின் சாதனைக் கூறி மோடி வாக்கு கேட்க தயங்குவது ஏன்?
பிரதமா் மோடி மத்திய அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க தயங்குவது ஏன்? என்றாா் திமுக பேச்சாளா் திண்டுக்கல் ஐ. லியோனி.
சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் சுதாவை ஆதரித்து திமுக தலைமைக் கழக பேச்சாளா் திண்டுக்கல் ஐ. லியோனி சனிக்கிழமை வாக்கு சேகரித்து பேசியது:
இந்தியாவின் சிறந்த முதல்வா் மு.க. ஸ்டாலின். தமிழகத்தின் திட்டங்களை உலக நாடுகளே பின்பற்றுகின்றன. 7 முறை தமிழகம் வந்துள்ள பிரதமா் மோடி மத்திய அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு கேட்டாரா? தமிழகத்துக்கு என்ன வளா்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளாா். தனது அரசின் சாதனைகளை பேசாமல், எதிா்க்கட்சிகளை வசை படுவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளாா் பிரதமா்.
Advertisement
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என பாஜக கூறியது. கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை தந்திருக்க வேண்டும். ஆனால், தரவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் மத்திய அரசில் 30 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளாா்.
இந்தியாவில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் தரும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. எனவே மதச்சாா்பற்ற ஆட்சியை தோ்ந்தெடுக்க காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ., எம்.பி. செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். பன்னீா்செல்வம், எஸ். ராஜகுமாா்,திமுக நகர செயலாளா் சுப்பராயன் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.