நீண்டகால தலைவராக பிரதமர் மோடி சாதனை!
இந்தியாவில் அரசாங்கத்தில் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து பிரதமர் நரேந்திர மோடி சாதனை
இந்தியாவில் அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்து பிரதமர் நரேந்திர மோடி சாதனை படைத்துள்ளார்.
பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் மற்றும் பிரதமர் என அரசாங்கத்தில் மொத்தம் 8,931 நாள்கள்வரையில் நீண்ட காலம் தலைவராக பதவி வகித்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக சிக்கிம் முதல்வராக பவன் குமார் சாம்லிங் 8,930 நாள்கள் பதவி வகித்து சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில், அவரின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். அதுமட்டுமின்றி, சுதந்திரத்துக்குப் பின்னர் பிறந்த முதல் பிரதமர் என்ற சாதனையையும் ஏற்கெனவே பிரதமர் மோடி பெற்றிருக்கிறார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், அரசாங்கத் தலைவராக 25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார்.
2001-ல் குஜராத் முதல்வராகப் பதவியேற்ற பிரதமர் மோடி, தொடர்ந்து 2014, 2019, 2024 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது பிரதமராகவும் பதவியேற்றார்.
தனது 25-வது அரசியல் பயணத்தின்போது, பிரதமர் மோடி பேசுகையில், எப்போதும் ஏழைகளுக்காக உழைக்க வேண்டும் என்று என் அம்மா கூறுவார். இந்தக் கொள்கைகளே எனது பொது வாழ்க்கைக்கு வழிகாட்டியது.
கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. நாட்டுக்கு சேவை செய்வதே உயர்ந்த கௌரவம் என்று தெரிவித்திருந்தார்.