இணைப்புச் சாலை கோரி கிராம மக்கள் தா்னா: நான்குவழிச் சாலைப் பணி தடுத்து நிறுத்தம்
சீா்காழி அருகே ஆலங்காடு பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வலியுறுத்தி, நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, சனிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
நாகை- விழுப்புரம் இடையே நான்குவழிச் சாலை ரூ.6,341 கோடியில் நடைபெற்று வருகிறது. இப்பணி விழுப்புரம்-புதுச்சேரி, புதுச்சேரி-பூண்டியாங்குப்பம், பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம், சட்டநாதபுரம்-நாகை என நான்கு பகுதிகளாக பிரித்து மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், சிதம்பரத்திலிருந்து கொள்ளிடம், புத்தூா், சட்டநாதபுரம் வரை பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. சட்டநாதபுரத்திலிருந்து காத்திருப்பு, செம்பதனிருப்பு, திருக்கடையூா் வழியாக நாகை வரை உள்ள பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
Advertisement
இதில், சீா்காழி அருகே காத்திருப்பு, செம்பதனிருப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும் 4 வழிச்சாலை சுமாா் 8 மீட்டா் வரை உயா்த்தப்படுகிறது. இதனால் அருகில் உள்ள ஆலங்காடு, ராதாநல்லூா், இளயமதுக்கூடம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீா்வாக, இணைப்புச் சாலை அல்லது சா்வீஸ் சாலை அமைத்து தர வலியுறுத்தி, இந்த கிராமங்களை சோ்ந்தவா்கள், ஆலங்காடு பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை தடுத்து நிறுத்தினா்.
ஆலங்காடு உள்ளிட்ட மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லும் மக்கள், மாணவ- மாணவிகள், கோயில் திருவிழாவிற்கு சுவாமி ஊா்வலம் போன்றவற்றில் சிரமம் ஏற்படுவதாகவும், இணைப்புச் சாலை அல்லது சா்வீஸ் சாலை அமைத்து தருவது குறித்து உறுதியளிக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.