மயிலாடுதுறை: இன்று ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.9) ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்
மயிலாடுதுறை, ஆக. 8: மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.9) ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குத்தாலம் வட்டாரத்தில் கங்காதாரபுரம், கோடிமங்கலம், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி மற்றும் மாந்தை ஆகிய ஊராட்சிகளுக்கு ஸ்ரீகண்டபுரம் காரனுா் சாலை பிஎன்எஸ் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறும்.
செம்பனாா்கோவில் வட்டாரத்தில் நல்லாடை, திருவிளையாட்டம், அரசூா், கொத்தங்குடி, ஈச்சங்குடி, நரசிங்கநத்தம், விளாகம் ஊராட்சிகளுக்கு நல்லாடை பாலாஜி திருமண மண்டபத்திலும், கொள்ளிடம் வட்டாரத்தில் தாண்டவன்குளம், புதுப்பட்டினம், கொடியம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு புதுப்பட்டினம் ஜேபிஎஸ் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.
ஆக.9-ஆம் தேதி நடைபெறவுள்ள இம்முகாம்களில், பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.