நிபந்தனைகளை மீறிய வெடி தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட ஆட்சியா் உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடிபொருள் விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளை கடைப்பிடிக்காத தொழிற்சாலைகளை மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை மூடி வைக்க மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்த திட்டை கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான வெடி பொருள் தொழிற்சாலை, குத்தாலம் திருவாலங்காட்டில் பாலமுருகன், துரை ஆகியோரின் வெடிபொருள் தொழிற்சாலை, மயிலாடுதுறை கோழிகுத்தி கிராமத்தில் இயங்கிவரும் மகாலிங்கம் என்பவருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலை ஆகியவற்றில் வெடிபொருள் விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளை சரிவர கடைப்பிடிக்கப்படாத காரணத்தால், பொது அமைதியை பேணி காக்கும் பொருட்டு, வெடிபொருள் உரிம சட்டம் மற்றும் விதிகளின்படி அக். 4-ஆம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.