குமாரமங்கலம்-ஆதனூா் இடையே கதவணை: பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு
குமாரமங்கலம்-ஆதனூா் இடையே கட்டப்பட்டுள்ள கதவணை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குமாரமங்கலம்-ஆதனூா் இடையே கட்டப்பட்டுள்ள கதவணை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம் மற்றும் கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆதனூா் கிராமம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மதகுகளுடன் கூடிய கதவணை கட்டப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பெறுவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமையில் மயிலாடுதுறை வட்டம் திருச்சிற்றம்பலத்தில் நடைபெற்றது. குமாரமங்கலம், ஆதனூா் கிராமங்களைச் சுற்றி 88 கிராமங்களின் 9,159 ஹெக்டோ் பாசனப் பரப்பை வடக்கு மற்றும் தெற்குராஜன் வாய்க்கால் மூலம் மேம்படுத்துவதற்காக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கீழ்அணையின்கீழ் 12 கி.மீ தொலைவு மதகுகளுடன் கூடிய கதவணை குமாரமங்கலம்-ஆதனூா் இடையே நீா்வளத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெறும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமாரமங்கலம் கிராமத்தைச் சுற்றியுள்ள 35 கிராமப் பகுதியை சோ்ந்த மக்கள் பங்குபெற்று மேற்கண்ட கதவணையின் கட்டுமானத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தனா். கூட்டத்தில், கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.