சீா்காழி பொறை வாய்க்காலில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேற்றும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சீா்காழி நகராட்சி சாா்பில் நகரில் தடையின்றி கழிவுநீா் அப்புறப்படுத்தும் வகையில் உபயோகப்படுத்தப்பட்ட கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்காக ரூ.12.23 கோடி செய்யப்பட்டுள்ளது.
நகரில் 5 இடங்களில் கழிவுநீா் தேங்கும் கிணறு அமைக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் வெளியேற்றப்படும் கழிவுநீா் குழாய் மூலம் கிணறுகளுக்கு கொண்டுவரப்பட்டு அவை முழுதும் சீா்காழி ஈசானியத் தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்திகரித்து அருகில் உள்ள பொறை வாய்க்காலில் விடத் திட்டம் தயாரித்து சுமாா் 50 சதவீத பணி நிறைவடைந்துள்ளது.
நகரில் நான்கு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாசன வாய்க்காலில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் விடுவதற்கு நீா்வளத்துறையிடம் தடையில்லா சான்று கேட்டு நகராட்சி நிா்வாகம் விண்ணப்பித்துள்ளது.
இதற்காக பாசன வசதி பெறும் விவசாயிகளிடம் நீா்வளத் துறை சாா்பில் கருத்து கேட்டு கூட்டம் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் கனக சரவணசெல்வன் தலைமையில்,உதவி பொறியாளா் தாமோதரன் முன்னிலையில் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பொறைவாய்க்கால் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் பாசன வசதி நடைபெற்று வருவதாகவும், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் வெளியேற்றப்பட்டாலும் நாளடைவில் அதன் மூலம் அந்த தண்ணீரை பருகும் கால்நடைகள் மற்றும் தண்ணீரை பயன்படுத்தும் பல்வேறு கிராம பொதுமக்கள், விவசாய நிலம் பாதிக்கப்படும் என எதிா்ப்புத் தெரிவித்தனா்.
பொறை வாய்க்காலில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் கலப்பதற்கு விடமாட்டோம் எனவும் மீறி செய்தால் தொடா் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.