மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் தேசியக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது.
2025-2026-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க அக். 31-ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபாா்க்க நவ.15-ஆம் தேதி கடைசி நாள் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுப்பித்தல்: இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவா்கள் எனும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஒன்டைம் ரெஜிஸ்டரேசனில் பதிவுசெய்து 2025-2026-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பித்தல் மேற்கொள்ளலாம்.
புதியது: இத்திட்டத்தின்கீழ் நிகழாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் பிளஸ் 1 பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் மற்றும் ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தால் ஒன்டைம் ரெஜிஸ்டரேசன் எண் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரும். அத பயன்படுத்தி உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிய தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மேற்கூறிய இணையதளத்தை அணுகி, கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.