அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நாகை மாவட்டத்தில், தூய்மை பராமரித்த 2 பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தூய்மைக்கான புரஸ்கர் விருதை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் புதன்கிழமை வழங்கினார்.
சுகாதாரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், சோப்புடன் கூடிய கைகழுவும் வசதி, இயக்குதல் மற்றும் பராமரித்தல், நடத்தை மற்றும் திறன் உயர்த்துதல் ஆகிய தலைப்புகளில் பள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான தூய்மைக்கான புரஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதன்படி, நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய அளவிலான புரஸ்கர் விருதுக்கும், கள்ளிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாநில அளவிலான புரஸ்கர் விருதுக்கும் தேர்வுப் பெற்றன.
விருதுக்குத் தேர்வு பெற்ற பள்ளிகளுக்கு விருது (பாராட்டுச் சான்று) மற்றும் பரிசுத் தொகை வழங்கும் விழா நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்து, தேசிய அளவில் தூய்மை புரஸ்கர் விருது பெற்ற கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், மாநில அளவில் தேர்வு பெற்ற கள்ளிமேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் தலா ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
இவை தவிர, மாவட்ட அளவில் தேர்வு பெற்ற 2 பள்ளிகளுக்கும், சுகாதாரம் சார்ந்து சிறப்பாகச் செயல்பட்ட 40 பள்ளிகளுக்கும் ஆட்சியர் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய், அனைவருக்கும் கல்வி இயக்க உதவித் திட்ட அலுவலர் அ. பீட்டர் பிரான்சிஸ், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். ஆஷா கிறிஸ்டி எமரால்ட், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.