மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! தில்லியில் 80 பன்னாட்டு விமானங்கள் ரத்து!
தில்லி விமான நிலையத்தில் 80 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால், தில்லி விமான நிலையத்தில் 80 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை (பிப். 28) கொல்லப்பட்டார்.
இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள ஈரான் அரசு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் கடும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்குள்ள பல்வேறு நாடுகள் தங்களது வான்வழிப் பாதைகளை முழுவதுமாக மூடியுள்ளன. இதனால், லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நாட்டின் தலைநகரான தில்லியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சுமார் 80 பன்னாட்டு விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தில்லியில் இருந்து புறப்பட வேண்டிய 36 விமானங்களும், வரவேண்டிய 44 விமானங்களும் ரத்தாகியுள்ளன.
இருப்பினும், மத்திய கிழக்கில் உள்ள எமிரேட்ஸ் உள்ளிட்ட சில விமான நிறுவனங்கள் தங்களது விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால், தில்லியில் இருந்து துபை சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் திரும்பி வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தில்லி விமான நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1,300 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தால் கடந்த 3 நாள்களில் மட்டும் இந்திய நிறுவனங்கள் 1,117 பன்னாட்டு விமானங்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
80 international flights have been canceled at Delhi airport due to war tensions in the Middle East.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.