ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
நாகை மாவட்டம், பொறையாறு ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், பொறையாறு ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. நிகழாண்டு பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சீதளாதேவி மாரியம்மன் தேரில் எழுந்தளினார். காலை 6.30 மணியளவில் தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
இதையொட்டி, நான்கு வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். தேர் பிற்பகலில் நிலையை வந்தடைந்தது. மேலும் பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர்.
தேர் திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். திங்கள்கிழமை கொடியிறக்குதல் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை புஷ்கரணியில் தீர்த்தம் வழங்கும் விழாவும், இரவு 8 மணியளவில் தெப்பத் திருவிழாவும், சந்தனக் காப்பு அலங்கார நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தி. சிவகுமார் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.