முகப்பு
நாகப்பட்டினம்

நாகை: 300 பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்

நாகப்பட்டினத்தில் சமூக நலத் துறை சார்பில் 300 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:54 AM
பகிர்:

நாகப்பட்டினத்தில் சமூக நலத் துறை சார்பில் 300 பெண்களுக்கு ரூ. 1 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்துக்கான தங்கம் ஆகியவற்றை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். 
நிகழ்ச்சியில் 11 ஒன்றியங்களைச் சேர்ந்த  300 பெண்களுக்கு ரூ.1 கோடியே 82 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பில் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்துக்கானதங்கம்,  25 பயனாளிகளுக்கு ரூ. ஒரு லட்சத்து ஆயிரத்து 875 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் என மொத்தம் 325 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 51 ஆயிரத்து 875 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கிப் பேசியது:
தமிழகத்தில் பெண்களின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமானது,  2011 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசுப் பணியிலிருக்கும் பெண்களுக்கு 6 மாதமாக இருந்த பேறு கால விடுப்பை ஊதியத்துடன் கூடிய 9 மாத கால விடுப்பாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 
சமூக நலத்துறையின் சார்பில் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ. 25,000  வீதம் அவர்தம் வங்கி கணக்கில் வைப்பீட்டு தொகையாக செலுத்தப்படுகிறது. இத்தொகை 18 மாதங்களுக்குப் பின் தலா  ரூ.40,000 ஆக கிடைக்கிறது.
   திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தற்போது  திருமாங்கல்யத்துக்கு தங்கம் 4 கிராமிலிருந்து, 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டம் பெண் கல்வியை ஊக்குவிக்கும் சமுதாய புரட்சிகரத் திட்டமாகும்.  தமிழக அரசு வழங்கும்   இத்தகைய நல்ல திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என்றார். 
விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால்,  நாகை சட்டப்பேரவை உறுப்பினர் எம். தமிமுன் அன்சாரி, கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் ஆசைமணி,  மாவட்ட சமூக நல அலுவலர் ஆர். ஜெயமீனா, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன், வெளிப்பாளையம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கா. குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.