பயணக் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து ரயில் பயணத்துக்கும் விரிவுபடுத்த வாய்ப்பு: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்
ரயில்வேயில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பயணக் காப்பீட்டுத் திட்டம், அனைத்து ரயில் பயணத்துக்கும் விரிவுபடுத்த வாய்ப்பு
ரயில்வேயில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பயணக் காப்பீட்டுத் திட்டம், அனைத்து ரயில் பயணத்துக்கும் விரிவுபடுத்த வாய்ப்பு இருப்பதாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
பிகாரில் ஜட்டன் கோப் என்பவர் ரயிலில் ஏறும்போது கூட்ட நெரிசலில் சிக்கி, கீழே விழுந்து ரயில் சக்கரம் ஏறி கடந்த 2002-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி பாட்னா உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பயணிகள் ரயிலில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ ஏற்படும் அடி, காயம், உயிரிழப்பு ஆகியவை அசம்பாவிதங்களாகக் கருதப்படும். பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற தகுதியானவர்கள். எனவே, பயணிகளின் அலட்சியம் என இதை ரயில்வே நிராகரிக்கக் கூடாது என்றனர். இந்தத் தீர்ப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காரணம், நாடு முழுவதும் இதுபோன்று 38 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.350 கோடி இழப்பீடாக ரயில்வே தருகிறது. இந்த சுமை இனி பல மடங்காக அதிகரிக்கும். இதனால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு ரயில்வே சார்பில் மனு தாக்கல் செய்யப்படலாம். இல்லையெனில், ஆன்லைன் முன்பதிவில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் பயணக் காப்பீட்டுத் திட்டம் அனைத்து பயணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.