முகப்பு
நாகப்பட்டினம்

நாகை நகராட்சியில் ரூ.1.86 கோடி மதிப்பில் பூங்காக்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

நாகை நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.1.86 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை தமிழக

Updated On : 3 செப்டம்பர், 2018 at 7:43 AM
பகிர்:

நாகை நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.1.86 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், அம்ரூத் திட்டத்தின்கீழ் ஆர்.வி.ஜி. நகரில் 5,345 சதுரஅடியில் ரூ.22 லட்சம் மதிப்பிலும், எம்.ஆர்.பி. நகரில் 11,140 சதுரஅடியில் ரூ.28.44 லட்சம் மதிப்பிலும்,  ஆண்டோ சிட்டி நகரில் 16,162 சதுரஅடியில் ரூ.44 லட்சம் மதிப்பிலும், நெய்தல் நகரில் 19,852 சதுரஅடியில் ரூ.32 லட்சம் மதிப்பிலும், மேட்டுப் பங்களாவில் 38,634 சதுரஅடியில் ரூ.60 லட்சம் மதிப்பிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
பூங்காக்களை திறந்து வைத்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அதனடிப்படையில் அம்ரூத் திட்டத்தின்கீழ், நாகை நகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.86 கோடி மதிப்பில், அமைக்கப்பட்ட பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இப்பூங்காக்களில் நடைபாதை, மின் விளக்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், காட்சி பொம்மைகள், புல்வெளி, செயற்கை நீரூற்று, கிரானைட் இருக்கைகள், கண்காணிப்பு கேமரா மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. இந்த அனைத்து பூங்காக்களையும் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பூங்காக்களை சுத்தமாகவும்,  சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி குப்பைக் கிடங்கில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் விவசாயிகளுக்கு இலவச நுண் உரங்களை அவர் வழங்கினார். முன்னதாக நாகப்பட்டினம் நகராட்சி எல்லை ஆரம்பத்தில் (திருவாரூர் சாலை) மரக்கன்று நடும் பணிகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (தஞ்சாவூர்) பா. காளிமுத்து, நாகை நகராட்சி ஆணையர் (பொ) ரவிச்சந்திரன், வட்டாட்சியர் இளங்கோவன், சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் தங்க. கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.