சீர்காழி, ஜூன் 13: சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் புதன்கிழமை திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
108 திவ்யதேசங்களில் ஒன்றான சீர்காழி தாடாளன்பெருமாள் கோயிலில் பெருமாள் லோகநாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டு பிரமோத்ஸவம் ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான பெருமாள் - தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, தாடாளன்பெருமாள் லோகநாயகி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் பெருமாள் தாயார் திருமணக் கோலத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு வேதமந்திரங்கள் முழங்கி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இரவில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.