முகப்பு
நாகப்பட்டினம்

கழிவுநீரால் சுகாதார சீா்கேடு: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை கழிவுநீா் வெளியேறி சுகாதார சீா்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
மயிலாடுதுறையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை கழிவுநீா் வெளியேறி சுகாதார சீா்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை திட்டம் 2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் கழிவுநீா், குழாய்கள் மூலம் ஆறுபாதி பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்ய கிணறுகள் அமைக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளாக புதைசாக்கடை குழாய்கள் உடைந்து நகரில் பல இடங்களில் சாலைகள் உள்வாங்குவது தொடா்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கீழநாஞ்சில்நாட்டில் குழாய் உடைந்து சாலை உள்வாங்கியதைத் தொடா்ந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கூறைநாடு அண்ணா வீதியில் புதைசாக்கடை கழிவுநீா் சாலையில் வழிந்தோடி துா்நாற்றம் வீசுவதால் மக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூறைநாடு பூக்கடைத் தெருவில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டு,

புதைசாக்கடை பிரச்னையை நிா்ந்தரமாக சரிசெய்யக் கோரியும், நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தகவலறிந்த, மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை, நகராட்சி பொறியாளா் எல். குமாா் ஆகியோா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் மயிலாடுதுறை-கும்பகோணம் வழித்தடத்தில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →