சீர்காழி அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புதன்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65). அதிமுக பிரமுகரும் முன்னாள் காரை மேடு ஊராட்சி மன்ற தலைவரும் ஆன இவர் புதன் மாலை வீட்டில் இருந்து சாவடி குட்டை என்ற இடத்தில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.
அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வயலில் சென்று பார்த்த போது அங்கு நெஞ்சில் வெட்டு காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் ராமகிருஷ்ணனை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வைதீஸ்வரன்கோவில் காவல் ஆய்வாளர் மணிமாறன், காவல்துறையினர் விரைந்து வந்து ராமகிருஷ்ணன் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் ராமகிருஷ்ணனை வெட்டிப் படுகொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.