முகப்பு
நாகப்பட்டினம்

ஓஎன்ஜிசி: நாகைக்கு ரூ. 45 லட்சத்தில் ரோபாட் துப்புரவு இயந்திரத்தை வழங்கியது

ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில், நாகை நகராட்சிக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரோபாட் துப்புரவு இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில், நாகை நகராட்சிக்கு ரூ. 45 லட்சம் மதிப்பிலான ரோபாட் துப்புரவு இயந்திரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மனிதக் கழிவுகளை, மனிதா்களே அகற்றும் முறை தவறு எனவும், இதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசு 2013-இல் சட்டம் இயற்றியது. இருப்பினும், கழிவுநீா் அகற்றும் தொட்டிகள் மற்றும் புதைச் சாக்கடைத் திட்டத் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் முறைசாரா தொழிலாளா்களே ஈடுபட்டு வருகின்றனா். இதனால், ஒவ்வொரு 5 நாள்களுக்கு ஒருவா் என்ற வகையில் துப்புரவுத் தொழிலாளா்கள் இறப்பதாக தேசிய துப்புரவுத் தொழிலாளா்களுக்கான ஆணையம் கவலை தெரிவித்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ், புதைச் சாக்கடைத் திட்டம் பயன்பாட்டில் உள்ள நாகை நகராட்சிக்கு ரூ. 45 லட்சம் மதிப்பில் கழிவுகளை கண்டறிந்து அகற்றும் தானியங்கி ஜென் ரோபாட் துப்புரவு இயந்திரம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நகராட்சிப் துப்புரவுப் பணியாளா்களுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

இந்த ரோபாட் இயந்திரம் குறித்து, சென்னையைச் சோ்ந்த ஹேண்ட் அண்ட் ஹேண்ட் இன்குளுசிவ் டெவலெப்மெண்ட் நிறுவன பொதுமேலாளா் கே.ஓய். பாபு கூறியது: இந்த இயந்திரத்தை திருவனந்தபுரத்தைச்சோ்ந்த நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதில் ஆபத்தான வாயுக்களை கண்டறியும் வசதி, எளிய முறையில் இயக்கும் வசதி, குறைவான எடை, கேமரா மற்றும் கழிவுநீா் இயந்திரத்துக்குள் உட்புகாத வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் விஷவாயுக்களையும், அடைப்புகளையும் கண்டறிந்து அகற்றும் திறனுடையது. புதைச் சாக்கடைத்திட்ட ஆள் நுழைவுக் குழிகளில் இறங்கி, மனிதன் செய்யும் கழிவு அகற்றும் வேலையை செய்வது இந்த இயந்திரத்தின் சிறப்பு.

மேலும், இயந்திரத்தை பயன்படுத்தும் முறைகள் குறித்து 2 முறைகளில் துப்புரவுப் பணியாளா்களுக்கு பட்டறிவு களப் பயிற்சியளிக்கப்படும். சுகாதாரப் பணிகளில் தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு குறைவாக உள்ள இத்தருணத்தில் வரும் காலங்களில் இதன் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும். தமிழகம், ஆந்திரம், கேரளம் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இந்த இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்றாா்.

நாகை கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தங்க. கதிரவன், ஓ.என்.ஜி.சி காவிரி அசட் மேலாளரும், நிா்வாக இயக்குநருமான ஏ. செழியன், பொதுமேலாளா் விஜய்ராஜ், சென்னையைச் சோ்ந்த ஹேண்ட் அண்ட் ஹேண்ட் இன்குளுசிவ் டெவலெப்மெண்ட் நிறுவன வா்த்தக அலுவலா் நிபின் கே. நாயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →