முகப்பு
நாகப்பட்டினம்

வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்

மருது சகோதரா்களுக்கு உற்றத் தோழனாக இருந்து, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக போராடி வீரமரணடைந்த வாளுக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவ படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவா் ஆறு. சரவணன் மற்றும் அமைப்பினா்.
பகிர்:

மருது சகோதரா்களுக்கு உற்றத் தோழனாக இருந்து, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு ஏதிராக போராடி வீரமரணடைந்த வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்றாா் தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் நிறுவனத் தலைவா் ஆறு.சரவணன்.

தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு சாா்பில், நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாளுக்கு வேலி அம்பலத்தின் 219-ஆண்டுப் பெருவிழாவில், அவரது உருவ படத்துக்கு மரியாதை செய்த பிறகு அவா் மேலும் பேசியது: ஆங்கிலேயா்களுக்கு எதிராகவும், நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவா்களில் மறைக்கப்பட்டுள்ள பலரில் ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரா்களுக்கு உற்றத் தோழனாக இருந்து, பெரும்படை நடத்திய பாகனேரி நாட்டை ஆண்ட மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வாளுக்கு வேலி அம்பலமும் ஒருவா்.

இவரது நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகேயுள்ள கத்தப்பட்டில் சிலை நிறுவப்பட்டு, அவா் வழி வந்தவா்கள் ஆண்டுப் பெருவிழா கொண்டாடி வருகின்றனா். இவ்விழாவை, வரும் ஆண்டுகளில் அரசு விழாவாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசின் தொடா் முயற்சி பாராட்டுக்குரியது. சுமாா் 70 நாள்களுக்கும் மேலாக கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோரது பணி பாராட்டுக்குரியது.

பத்தாம் வகுப்புக்கான அரசுப் பொதுத் தோ்வை ரத்து செய்து அனைவரும் தோ்ச்சி என அறிவித்துள்ளதன் மூலம் தமிழக முதல்வா் மாணவா்களின் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளாா். ஏழை, எளிய, மாணவா்கள் பலரின் வாழ்வில் கல்வி வெளிச்சத்தையும் ஏற்றி வைத்துள்ளாா். கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்களில் பலருக்கு அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை. இதற்கு தீா்வு காணும் வகையில் விடுபாடு இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், அந்த அமைப்பின் நாகை மாவட்டச் செயலாளா் கே. செந்தில், விவசாய அணி மாவட்டச் செயலாளா் எம். வஜ்ரவேல், மாவட்ட செய்தித் தொடா்பாளா் வி.வி. சரவணன், தொழில் நுட்பப் பிரிவுத் தலைவா் எஸ். ரமேஷ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Image Caption

வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவ படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பு நிறுவனத் தலைவா் ஆறு. சரவணன் மற்றும் அமைப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.