அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளர்கள்: பிரசாரம் செய்ய அழைப்பு!
அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி. கந்தசாமி ஆகியோர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரியது குறித்து...
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி. கந்தசாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அண்ணாமலையின் இல்லத்திற்கு வெள்ளிக்கிழமை காலை சென்ற அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.பி. கந்தசாமி ஆகியோர் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர். பேரவைத் தேர்தலில் தங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும், கவுண்டம்பாளையம், சூலூர் பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணாமலை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.
அப்போது, அண்ணாமலை அண்ணா என்னுடைய ஓட்டை உங்களுக்கு செலுத்தி விட்டு. பிஎல்ஏ ஏஜென்டா நானே உங்களுக்கு வேலை செய்கிறேன் என்று பி.ஆர்.ஜி.அருண்குமாரிடம் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.