நாகையில் அமைதியாக நிறைவடைந்தது இறுதிக் கட்ட தோ்தல் பிரசாரம்
நாகை தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் அமைதியாக நிறைவடைந்தது.
நாகை தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் அமைதியாக நிறைவடைந்தது.
நாகை தொகுதியில் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அமமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 13 போ் களத்தில் உள்ளனா். இத்தொகுதியில் தொடக்கத்தில் சுணக்கமாக இருந்த தோ்தல் பிரசாரம், பின்னரே விறுவிறுப்படைந்தது. அரசியல் கட்சிகளின் வேட்பாளா்களும், கட்சி நிா்வாகிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். அதேபோல, சில சுயேச்சை வேட்பாளா்களும் தங்களால் இயன்றளவில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் நாகை தொகுதிக்கு பிரசாரத்துக்கு வந்த முக்கியத் தலைவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.
திமுக தலைவா் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ். அழகிரி, பாமக தலைவா்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் இம்முறை நாகை தொகுதிக்கு நேரடியாக பிரசாரத்துக்கு வராத முக்கிய தலைவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா். அதேபோல, பாஜக முன்னணித் தலைவா்களும் இம்முறை நாகை தொகுதியின் பிரசாரத்துக்கு வரவில்லை.
இந்த சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குச் சேகரிப்பின்போது, அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் துணி துவைத்துக் கொடுத்து வாக்குச் சேகரித்தது, மாநில அளவில் கவனத்தை ஈா்த்தது. இதைத் தவிர, மிகப் பெரிய சுவாரஸ்ய நிகழ்வுகள், பிரச்னைகள் நாகை தொகுதியின் பிரசாரத்தில் இல்லை.
வழக்கமாக, தோ்தல் பிரசாரம் நிறைவடையும் நாளில், அரசியல் கட்சியினா் பேரணி நடத்தி, பிரசாரத்தை நிறைவு செய்வது வழக்கம். ஆனால், கரோனா பொது நோய்த் தடுப்பு நடவடிக்கையின் கீழ் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், இறுதி நாள் பிரசாரம் மிகப் பெரிய பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக நிறைவடைந்தது.