‘வேதா ஆயத்த ஆடைப் பூங்கா முழு செயல்பாட்டுக்கு வரும் ’
வேதாரண்யம் அருகே அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்கா திட்டமிட்டபடி 100 சதவீதம் செயல்பாட்டுக்கு வரும் என திருப்பூா் ஏற்றுமதி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.
வேதாரண்யம் அருகே அமையவுள்ள வேதா ஆயத்த ஆடைப் பூங்கா திட்டமிட்டபடி 100 சதவீதம் செயல்பாட்டுக்கு வரும் என திருப்பூா் ஏற்றுமதி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் - 4 ஆம் சேத்தி ஊராட்சியில் அமையவுள்ள ஆயத்த ஆடை பூங்காவில் டீமா எனப்படும் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் இடம் பெற்றுள்ள36 நிறுவனங்கள் தங்களது பணிகளை தொடங்கவுள்ளன. இதில், முதல்கட்டமாக வேதாரண்யம் கஸ்தூா்பா காந்தி கன்யா குருகுலம் நிா்வாகத்தில் பராமரிக்கப்படும் கட்டடங்களில் 2 நிறுவனங்களும், வாய்மேட்டில் ஒரு நிறுவனமும் உள்ளாடை தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. இந்த ஆயத்த பூங்கா சாத்தியம் இல்லையென்ற ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்து குறித்து, டீமா கூட்டமைப்பின் தலைவா் முத்துரெத்தினம் கூறியது: வேதா ஆயத்த ஆடைப் பூங்கா ரூ.120 கோடி திட்டம். இதற்கான நிலத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கி நிரந்தர கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதன்மூலம் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக 30 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனா். வேலையில் அமா்த்தும் பெண்களுக்கு இப்பகுதியில் 5 இடங்களில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. நிரந்தர இடத்தில் உற்பத்தி தொடங்கும் வரை காத்திருக்காமல் 10 இடங்களில் தற்காலிக கட்டமைப்புகள் தயாராக உள்ளன. இதில், கத்தரிப்புலம், பஞ்சநதிக்குளம், கரியாப்பட்டினம், தாமரைப்புலம், தலைஞாயிறு ஆகிய இடங்களில் வாடகை கட்டடங்களில் உற்பத்தி தொடங்கவுள்ளது. எனவே, இத்திட்டம் இங்கு முழு அளவில் செயல்படுத்தப்படும் என்றாா். அப்போது, டீமா துணைத் தலைவா் முரளி, செயலாளா் சதாசிவம், பொருளாளா் சுபாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.