நாகையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், நாகை தனி வட்டாட்சியரும் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்புக் குழு அலுவலருமான ஜி. ரவி, சுகாதார ஆய்வாளா் எம். மணிமாறன், காவல் உதவி ஆய்வாளா் செந்தில் ஆகியோரைக் கொண்ட சிறப்பு கண்காணிப்புக் குழுவினா் நாகை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, உணவகம் ஒன்றில் 100-க்கும் மேற்பட்டோா் அமா்ந்து உணவருந்தியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.