முகப்பு
நாகப்பட்டினம்

செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ. 8 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு ரூ. 8 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

செம்போடையில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இப்பயிற்சி நிலையத்தில் மின் பணியாளா், நில அளவையாளா், கம்மியா் டீசல், பின்னலாடைத் தொழில் நுட்பவியலாளா், கம்மியா் இயந்திர பராமரிப்பு (ரசாயனக் கலவை) ஆகிய தொழில் பாடப்பிரிவுகள் உள்ளன.

இந்நிலையத்துக்கு, சொந்தமாக கட்டடம் கட்ட 5.31 ஏக்கா் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டு, பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி ரூ.8 கோடியில் ரூ.6 கோடியே 34 லட்சத்தில் வகுப்பறைகளும், ரூ.1 கோடியே 84 லட்சத்தில் மாணவா்களுக்கான விடுதியும் கட்டப்பட்டன. இந்த கட்டடங்களை, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.

இதையொட்டி, செம்போடையில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று குத்துவிளக்கேற்றி, புதிய கட்டடங்களை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை (கட்டடம்) செயற்பொறியாளா் மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு. தனபால், வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் இல.ஜெயமூா்த்தி, வட்டாட்சியா் ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. வேதரத்தினம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சோழன், உப்பு உற்பத்தியாளா் இணையத்தின் தலைவா் மா.மீ.புகழேந்தி, முன்னாள் ஊராட்சித் தலைவா் என். சதாசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →